Saturday, 27 January 2024

விதையே.. நீ உறங்குகிறாயா..?


நெல் விதையே.. 

நீ உறங்குகிறாயா..? 

முடியவில்லை

விதைத்தவன் என்னால்...


நன்றாக வளர்ப்பேனா...

செழித்து சிரிக்கும்

உன் முகத்தை பார்ப்பேனா...


பல உயிர்களின்

வயிற்றை வாடாது

காக்கத் துடிக்கும் உன்னை

வாடாமல் காப்பேனா..


வேதியியல் கழிவுகளகற்றி 

இயற்கை காற்றை

சுவாசிக்க விடுவேனா..


மனிதக் கேடுகள்

ஏற்றும் நோயண்டாது 

உனை அணைப்பேனா..


குடைந்த கேள்விகள்

நிறைந்த மனதால்

உறங்க முடியவில்லை..


கண்ணீர்த் துளிகளால்

நனைக்க மாட்டேன் 

கவலையின்றி எழுந்து வா..

நடுங்கும் உனக்கு

ஊட்டச் சத்தாயிருப்பேன்

பூமிப்பந்தின் பசுமைக்கு

உயிர் கொடுக்கும்

உன் குடுமபத்தை

கட்டிக் காக்கும்

போராளி ஆவேன்.. 


என்னுயிர் போனாலும் 

உன்னுயிரை

வளர்த்தெடுப்பேன்

இறுதிமூச்சு விடும்வரை...

*** ***

(ஓடாய் தேயும் உழவனுக்கு சமர்ப்பணம் )

Monday, 22 January 2024

ராம்.. நாமம் சொல்லும் தமிழ ராம்..(22-01-24)


 காக்கும் ஆண்டவராம்

விஷ்ணுவின் மறு

பிறவியானவராம்

தசரதன் பெற்றவராம்

அயோத்தியில்

பிறந்தவராம்...


ஓர்சொல்.. ஓர்வில் 

ஓர்இல் கொண்டவராம்

தெய்வ பிராட்டி

சீதையை மணந்தவராம்...


அதிபலசாலி அனுமன் 

அவர் பக்தராம்

ஜெய் ஸ்ரீராமென

நெஞ்சை பிளந்தவராம்

இலங்கையை எரித்தவராம்..


அநீதியை

அழித்தவராம்

நீதியை நாட்டியவராம்..


தேசத் தந்தை 

வணங்கியவராம்

உயிர் பிரியுமுன்

ஹேராமென 

துடித்தவராம்...


ராம்.. ராமென வணங்கும்

உயிர்கள் துன்பமகல

அருள்புரிந்தவராம்

அகிலத்தை காத்தவராம்...


அல்ல 108முறை

வாழும் வரை

தனை மறந்தே

ராம்.. ஜெயம்

தாய் மொழியில்

சொல்பவராம்

ஆத்திகன்..நாத்திகன்

கலந்த தமிழராம்

நாம் எல்லாம் 

கம்ப ராமாயணம்

படித்தவராம்...

தமிழ் கடவுள்(முருகன்)

தாய்மாமன் முறையாம் 

திருமாலின் அவதாரம்

ஜெய்.. ஸ்ரீ..ரா..ம்🙏

Tuesday, 16 January 2024

தை..தை..யென* *தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*

 💐 *தை..தை..யென*

*தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*


*தை* மகள்

தமிழச்சிகளின்

ஒய்யாரமாய் ஒதுங்கிய

ஓரக்கண்கள்

கனலாய்.. காதலாய்

ஒளிவீசி உசுப்பிட.


திரண்ட தோளோடு

துடிக்கும் விடலைகள் 

துள்ளி விளையாட..


கொழுத்த பிடறியாய்

திமிரும் எருதுகள் 

எள்ளி நகையாட..


ஆடுகளத்தில் அதிரடியாய்

அதகளம் செய்யும் 

ஜல்லிக்கட்டு..

அழியாத சுவடாய்

வீரச் சின்னமாய் 

ஆழமாய் பதிந்த

விழுப்புண் தழும்புடன்

வீரத்தமிழன் செய்த

போர் விளையாட்டின்

நுழைவுச் சீட்டு...


கறுப்புக் கரும்பு

மஞ்சள்.. கிழங்கு

அனைத்த

மண்பானை வயிற்றில்

வெள்ளை பச்சரிசி

பாசிப் பருப்புடன்

வெல்லம் அணைக்க

பாலிட்டு.. கொஞ்சி

கொதிக்க விட்டு 

*பொங்கலோ.. பொங்கலென*

குடும்பமாய்.. கூட்டமாய் 

குதூகல கூச்சலிட்டு

சூரியனை வணங்கி

மாட்டன்னையின் 

நெற்றியில்

சிவப்புத் திலகமிட்டு

வாழவைத்த

பூமியை முத்தமிட்டு

வாழ்வளிக்கும்

உழவனை உயர்வாக்கி..  

உலகெங்கும் 

உரக்கச் சொல்லும் ஓர்விழா.. 

*பொங்கல்..* எனும் 

தமிழர் திருவிழா

தைத் திருநாள்...


*தை..தை..யென*

*ஜதிகள் அதிரிட*

கொண்டாடு தமிழா..

உனதருமை பெருமை

அண்ணாந்து பார்க்கும் 

உலகம் என்றும் 

உன்னோடு.. தமிழா...🙏

***