Friday, 30 June 2023

💐அலுமினி என்னும் ஆரவார விழா...💐

                        


அழகுத் தமிழினமே

உனதன்புள்ளத்தால் அகமகிழ்ந்தேன்

கற்றது கடுகளவு

கல்லாதது உலகளவென

கைத்தொழில் கற்பதற்கே

கட்டிடக் கலைத்தொழில் கற்றேன்

தாய்மண்ணை கைபிடித்து கரைசேர...

 

கனிந்த காலமோ..

தடுமாறும் வழியறியா  ஆடல்ல

தடை உடைத்து சிகரம் தொடும்

தரணி போற்றும்

தமிழினத்தவன் இவனென

தலைநகரத்(இந்தியத்) தாயின்

கைபிடித்து வாழ்வதற்கே

வழி செய்தது...

 

அறிவைத் தேடி

உழைப்பைத் தேடி.. உயர்வைத் தேடி…  

நிற்க.. திரும்ப.. மனமின்றி ஓடினேன்..

அரை நூற்றாண்டு

அவயம் தொடும்வேளை

அறை நண்பன்.. அடித்துபிடித்தவன்

கல்லூரிக் கூடத்தில்

காரசார விவாதத்தில்

அக்கால நொடிகளை

தடதடக்க..திடுதிடுக்க..

கடக்க வைத்தவன்

அன்புக்கரம் நீட்டி அழைக்கிறான்...

 

மீண்டும் மனம் விரும்புகிறது

விட்டுச் சென்றதையும்

தட்டிச் சென்றதையும்

கட்டி யணைக்க..

அன்றுபூத்த மலர்களின்

பசுமை நிறைந்த

நினைவுகளை அசைபோட...

 

கற்பித்த குருவை வணங்கி

நன்றிக் கரம்கூப்பி பாதம் தொட ..

தெய்வத் திருவருளால்

இப்பிறவி தந்த

பெற்றவர் பெருமைகொள்ள

 

நெடிய பாதையின்

கறுப்பு வெள்ளை.. கனவு நனவுகள்..

சோதனை சாதனைகள்

இன்ப துன்பங்களில் இளைப்பாறி

ஆறுதலளித்து ஆரத்தழுவி..

அன்று இணைந்த இடத்தில்

அலுமினி என்னும்

ஆரவார விழாவில்...

* * *

Sunday, 25 June 2023

*வெள்ளைக்கு.. மற்றுமோர் பெயர்*



வெள்ளை மனம்

என்பது

நல் எண்ணம்

வெள்ளை நிறம்

என்றால் 

நல் அமைதி

எனில் இதற்கேன்

விதவையென்னும்

மற்றுமோர் பெயர்...


விதவை என்னும்

வெள்ளை

தேவதைகளாய்

பொம்மைகளாய்

உணர்வின் றிருக்கிறோம்

உண்மையாக

அமைதியாக

ஆண் துணையில்லா

ஊமைகளாக..


கட்டியவன்

கைவிட்டு சென்றது

படைத்தவன் சாபமா

பித்ருக்களின் பாவமா

கேள்விகள் துளைக்க..


வாய்த்தவன்

இல்லையெனில்

வயிற்றுப்பசிக்கு

வழியுண்டோ

தடுமாறிய 

இருண்ட உலகில்

திட மனதுடன்

வெளிச்ச திசை

நோக்குவதற்குள் 

திக்கறியா ஆடுகளாய்

அகப்படுகிறோம் 

வர்க்கமனம் படைத்த

ஆண்களின்

அகதிகளாக..


ஆனாலும்..

துணிவோடும்

ஆண்டவன்

துணையோடும்

எமக்கும் வாழ்வுண்டென

ஏங்கும் 

கைம்பெண்களின்

கரம் பிடித்து

தூக்கி விடும்

கணவன்களின்

நல்மனம் நோக்கி..


சிறைகளை உடைத்த

சிறகுகள் முளைத்த

பறவைகளாய்

சுதந்திர வானம்நோக்கி..


நடைபோடுகிறோம்

உணர்வில்லா

சடங்குகளுக்குள்

வளைந்த 

நடை சடலங்களாக

(ஜடங்களாக)...

* *

Saturday, 24 June 2023

🏛️971கோடியில் பிரமாண்ட நாடாளுமன்றம் திறப்பு...🏛️


28-05-2023(மே 28)

உலக 

பட்டினி நாளென

பலரறியாத இன்று .

ஆதீனங்கள் அணிவகுக்க

திருமுறைகள் ஓத

பதிய பாராளுமன்றம்

திறந்து உலகறியச் செய்தது

நம் பாரதநாடு...


கர்வச் சிரிப்புடன்

கேலிச் சிரிப்புடன்

சிவந்த சினத்துடன்

நகரும் நகர்ப்புறவாசிகள்..


செங்கோலா..

புதிய நாடாளுமன்றமா..

என்ன.. ஏன்.. எதற்கென

கேள்வியுடன் நகரும்

கிராமவாசிகள்...


எதையும் அறியாமல்

எங்கோ.. ஏதோ.. மூலையில்

வியக்கும் சாதனைகள்

வியர்க்கும் வேதனைகள்

பண்பாடற்ற  பாவங்களும்

இதனால் ஒன்றும்

தடைபடுவதில்லை என்றும்...

 

செம்மை ஆட்சி

செய்வே னென்னும்

பிரதமர் சூளுரையுடன்... 

விழாக்கோலம் பளபளக்கும்

பாரத நாட்டில்


பசியும்..

பரதேசி வாழ்க்கையும்..

குறையுமா.. என்னும் 

ஆதங்கத்துடன்


எளிய மனிதன் வாழ்வும் 

ஏற்றம் அடையுமா..

என்னும் ஏக்கத்துடன்


இன்றைய நாள்

இனிதே முடிந்தது

வரலாற்று நாளாக...

* * *

🌸தந்தையர் தினம்- வாழ்த்துக்கள் 🌸



அகந்தை அழித்து

ஆக்கலில் வெற்றி பெறும் 

விந்தைப் பிறவிகள்

தந்தைகள்..


பூக்களாய் சிதறிய 

பிள்ளைகளால் 

பூமிப் பந்தை 

சிரிக்க வைக்கும்

சிந்தனை சிற்பிகள்

தந்தைகள்..


நன்மை தீமை

நாலும் தெரிந்தவை

கற்பித்தலும்..

தோல்வியிலும்

தோள் கொடுத்தும்

என்றும் எதிலும்

ஆசானாய்

எல்லாம் வல்ல

இறைவனாய் காப்பது

கண்ணெதிரில்

காணும் அப்பாக்களே..


முடியாதவற்றை

முடியுமென

முடிக்கும்வரை

முயற்சியை

மூச்சாக்குபவன்

தந்தைகள்..


கள்வனோ

கதாநாயகனோ

வெறுத்தாலும்

மறுத்தாலும்

ஒதுக்காமல்

அரவணைப்போம்

முதிய தந்தையரை


படிப்பினை தருவோம்

இளம் தந்தையராய்

இனி வளரும் தந்தையர்கு

இன்றைய தினம்...

*. * *

🌸அன்னையர் தின வாழ்த்துக்கள்🌸



அம்மா.. அன்னை..

ஆத்தா.. தாய்..

அம்மி.. அம்மே..

மம்மி... மாம்..மதரென

பல பெயர்களில்

பல மொழிகளில்

அழைத்தாலும்

அவள் மட்டுமே

அன்பெனும் 

பேரூற்றின் 

ஆணிவேர்..


பல கிளைகளாய் 

படர்ந்த 

ஆல மரமாயினும் 

ஆணி வேரறுந்தால்

அடிமட்டம் தான்..


பண்பு, பாரம்பரியம்

அமைதி அரவணைப்பு 

காலம்  காலமாய்

இம் மண்ணில்

தாங்கி நிற்கும்

அம்மா என்னும்

ஆணிவேர் காயுமுன்

காவலனாய்

கண்ணாய்

காத்து நிற்போம்..


வாழ்வெல்லாம்

வாடா மலராய்

வசந்த மளிக்கும்

வருங்கால அன்னையராய் 

மாறும் பெண்னினத்தை 

வாடியமலராய் வீழாது

தாங்கும் தூணாய்

துணிந்து நிற்போம்...

* * *

🌸முத்தமிழமுதம்..பருகவே🌸

எண் சேர்ந்த எழுத்தும்

பண் பாடுணர்ந்த பணிவும்

கண் குளிர்ந்த கலையும் 

எரு சேர்ந்த மண்ணும் 

மண் சார்ந்த வாழ்வும்

என்றும் மகத்துவம்...


வேற்றுமை யில்லா

மனம் ஒன்றும் ஓற்றுமையே

வெற்றி பெறும்

சமூக தத்துவம்...


கடலில்

மூழ்க முயல்வதோ

முத்தெடுக்க..


தேடலில்

எவ்வணியில் இணைவதும்

முத்தமி ழமுதம் பருகவே...

* "**

🌸தமிழே... உன்னை வணங்குகிறேன்🌸

தரணியெங்கும்

சுற்றினாலும் 


கண்குளிரும் கலைகள் 
பசியாற்றும் பண்டங்கள்
கூட்டமுள்ள குடும்பம்
ஆட்டமுள்ள ஆர்ப்பாட்டம்
பாசமுள்ள பரிமாற்றம் 
பலநூறு அனுபவங்கள்
பெற்றாலும் கற்றாலும்.. 


தாய் மண்ணில்
தடம்பதிக்கும் சுகமே
இன்பம். ஆனந்தம்...


பண்பிலும்.. பண்பாட்டிலும்..
வாழும் முறையிலும் 
மேலோங்கி நிற்பது
தமிழர்தம் கலாச்சாரமே 
என்னும்
கர்வம் கொள்வதால்
தமிழே... உன்னை
தலை வணங்குகிறேன்...


மீண்டும் ஓர்
பிறவியெனில்
தமிழினத்தில் என்னை
தவழவிடு
தமிழ்த் தாயே...

* *