Sunday, 31 December 2023

ஆளப்பிறந்தோமென அடியெடுத்து வைக்கட்டும்

அனைத்து உயிர்களும்..

இன்னலு டைத்து

இன்ப மணைத்து

ஆளப் பிறந்தோமென

அடியெடுத்து வைக்கட்டும்

ஆங்கில புத்தாண்டில்...


பிறந்தது

புதியஆண்டு மட்டுமா..?

எட்டத் துடிக்கும் எண்ணங்கள்

வெட்டியெறிந்த அழுக்குமனம்

ஒடடத் துடிக்கும் வெற்றிகள்

கொட்டி கொடுக்காத

கொட்ட மடிக்காத

கோடிமைல் தூரத்து

அன்பு உள்ளங்கள்

இனியோர் புரட்சிசெய்ய

புதியதாய் பிறந்தோமென

பெருமூச்சு விடட்டும்..


ஏமாற்றப் பட்டவன்

கைவிடப் பட்டவன் 

என்னால் யாருமில்லையென

உன்தலை நிமிரட்டும்...


உன்(னை) சுற்று(றிய)ச் சூழல்

உனைப்பெற்ற பூமித்தாய்

பெருமை யடையட்டும்

உன்செயலால்..

முடியுமெனும் மூச்சால்

இதயம் துடிக்கட்டும்

பிறக்கும்..ஒவ்வோர்

நாளும்.. நொடியும்...


வேண்டும் ஆங்கிலம்

ஆங்கில ஆண்டும்..

ஆனாலும் அகிலம்போற்றும் 

தமிழ்ப்பாடல் மணக்கும்

தமிழ்ப்பேர் இனிக்கும்

தரணியே  தழைக்கும்

அதுதரும் பண்பினை

மறவாதே..பரப்பிட தயங்காதே.🙏

***. *** ***

அதான் 2024 பொறந்தாச்சே.. சட்டுபட்டுனு அடுத்த வேலைய பாருங்க.. தயாராகுங்க.. நமக்காக தமிழன்னை காத்திருக்கிறாள்.. பொங்கல் சோறு சாப்பிட..😀)

Saturday, 30 December 2023

2024-ஆங்கில புத்தாண்டே.. வருக.வருக..

31-12-2023  இன்று
வாரத்தின்.. மாதத்தின்
வருடத்தின் இறுதிநாள்
விடுமுறை நாளென
சிறப்புடன்..சிரிப்புடன்
விடை பெற்று 
2024ற்கு வழிவிடுகிறது...

ஆங்கில புத்தாண்டை
ஆங்கில மோகத்தில்
ஆங்கிலவழியில்
கொண்டாட
மனம்சிதறி.. மலையேறி
சீரழியும் சிறைக்குள்
சிக்கிவிடாதே...
சிறுமைகள் துளிர்த்து
பெருமைகள் துளைத்து
பேரிழப்பை பரிசாக்கும்
எழுதப்படாத சட்டத்தை
எட்டிஉதைத்து எறிந்துவிடு...

காலத்தே 
பயிர் செய்தால்
நற்காலமே..
காலாவதியாக்கும்
மதுவால் 
அலங்கோலமே...

தவறுகள் திருந்திய
திருமகனாய்..
புது உணர்வால்
புது எண்ணங்களால்
புது மனிதனாய்
புதுமைபல செய்திட
பறப்படு தோழா...

வாழ்க்கை ஓர்
நெடும் பயணம்
பணத்தால்..பாசத்தால்
உறவால்.. பிரிவால்
இழந்தது எதுவும் 
நிரந்தரமில்லை..
மறுவுருவமாய்..மானசீகமாய்
உனைக்காண திரும்புமென
உறுதிக்கொள்...

அவன்.. அதை
இவன்.. இதை
எவன்.. எதை
சொன்னாலும்
செய்தாலும்..
என்மனம் சொல்வதை
செய்தேனென
உரக்கச்சொல்
உறுதியாய் நில்..
எதைச் செய்தாலும் 
இப்ப இல்லைன்னா
எப்பவும் இல்லையெனும்
எண்ணத்தில் செல்...

நீ பேசும்
நற்சொல்
நற்செயல்
நற்பவியாகட்டும்...

வாழும் வரை
நீ வீழும் வரை
வணங்கும் 
வாழையாய் மாறு.. 🙏

Friday, 29 December 2023

தமிழினத்தோலில் மின்னிய பொன்மனச் செம்மல்...

 



கறுப்பு வெள்ளை 

கனவுகளை

வண்ணங்களால்

அலங்கரித்து

ஆராதனை செய்தவர்...


சிவப்புத் தோல்கள்

மின்னிய விளக்குகளில்

கறுப்புத் தோலை

மின்ன வைத்தவர்

பொறுப்புள்ள அண்ணனாய்

தம்பிகளின் முன்

பொன்னாய் ஜொலித்தவர்...


ஓசியாய் ஏமாற்றி

பாசாங்கு செய்தவர்முன்

பசி என்பதையழித்து

பாசத்திற்கு மறுபெயரானவர்...


நிழல் உலகில்

வேடம்தரித்த இவர்

நிஜ உலகில் 

கபடதாரிகளை  உரித்தவர்...


சொல்லால்.. செயலால்

பொன்மனச் செம்மலின் 

உருவத்தில் வாழ்ந்த

கறுப்பு வைரம்...


அகிம்சை அழித்து

தேசப்பற்றை நெஞ்சிலேற்றி

கண்ணகளால் தீப்பொறி

பறக்க வைத்தவர்

நீதிக்குத் தண்டனையெனும்

அநீதியை அறுத்தெழ 

ஒன்றுசேர் தோழாயென..

கனல் வார்த்தைகளால்

இளம் தலைமுறையை

கட்டி இழுத்தவர்

தன்மானத் தமிழனை

தட்டி எழுப்பியவர்...


ஆண்டாள் பெற்ற

இம் மைந்தன்

அன்புள்ளத்தால்

ஆண்டவன்..

எனும் பேறுடனே மறைந்து

மக்கள் மனதில் நிலைத்துவிட்டான்

என்றென்றும்...🙏

Sunday, 24 December 2023

பா...வுக்கே இலக்கணமான சுபா...



 பா க்களால் 

பாரதப் பிள்ளைகளை

தாலாட்டியவர்

பரங்கியரை அதிரவைத்தவர்...


எழுத்தாணியால்

செதுக்கிய எழுத்துக்களால்..

ஏனென்ற கேள்விகளால்..

ஏவுகணை செய்தவர்...


ஆறாத சினத்தால்

தீயவரை துளைத்துவிடு தோழாயென

புதுமைப் பெண்களின்

மனதில் விதையானவர்..


படைத்தவனை

ஆராதிக்கும இனத்தில் உதித்தாலும் 

ஆகாதென தள்ளிவைத்தவனை

அணைத்து முண்டாசுகட்டி

மீசை முறுக்கியவர்...


பாரெங்கும் பரதேசியாய்

பழ மொழியை நுகரந்தபின்

தாய்மண் தமிழ்மொழியை

நாடி நரம்புகளில்

சுவாசித்தவர்...


உலகம் வியந்த

மொழி பிறந்த

எம் மண்ணிற்கும்

எம் பாட்டுக்கும் 

தானே தந்தையென

தேசத் தந்தைமுன்

தலைக்கனம் காட்டியவர்...


காக்கை குருவிகளும்

நம் இனமே

காணி நிலமானாலும் 

அதற்கும் பங்குண்டென

தலையில் தட்டியவர்...


செல்வம்பின் செல்லாது

செல்வந்தர்பின் நில்லாது

செல்லம்மா.. செல்லம்மாயென

சொல்லிக்கொண்டே 

இருந்துவிட்டார் இறக்கும்வரை...


இந்திய மண்ணில்

இவனைப்போல்

இனியொருவன்

இனிமேல் இல்லையென

எண்ணியவர்..ஏசியவர்..

அழுதவர்.. ஆகாதவர்

அனைவர் மனதிலும்

சிம்மாசனமிட்டு

இறக்கும்வரை 

இருந்துவிட்டார்..


யார்.. யாரென

யாரும் கேட்காமல்

யாவரும் நலமடையவே

பா.... வுக்கே இலக்கணமான

பா.. என்னும் சுபா...🙏

* *


இன்று பாரதியார் பிறந்தநாளில் அவரைத் தொழவேண்டும்...  இல்லையெனில் தமிழனாய் அவரை நினைத்து பெருமைகொள்வோம்.. தமிழினமே...🙏

வாட் நெக்ஸ்ட்டென வாட்சப்கால் பேசும் மும்மூர்த்திகள்

 வாய்க்கா..வரப்பு

சண்டை போடாமல்

சிண்டு முடிக்காமல்

துண்டு போட்டு

செந்தமிழ்.. கொடுந்தமிழ்

செல்(Cell)தமிழால்

தொண்டாற்றிய

வாண்டுகளை

நோண்டி நொங்காமல்

தோண்டி துருவாமல்

மண்டை உடையாது

மண்டி யிடாது..

அண்ட வைத்து

அண்டாகுண்டா ஏதுமின்றி 

அலைக் களித்து 

கண்டு.. கேட்டு களைப்பாக்கி

பண்டிதனாக்கி

அண்ட மடக்கிய பிண்டமாய் ...


நமக்குள் தூங்கிய

நவ ரசங்களை

தட்டி எழுப்பி..

அறு சுவையை

பார்வையால் ஊட்டி..


உலகை மயிலால் 

சுற்றிய முருகனாகாது

உள்ளங்கையால் சுற்றி

கணபதியாக்கி

பானைவயிறு வீங்க

எந்நேரம் காதலாய்

பணிவாய்.. பவ்யமாய்..

தலைகவிழச் செய்து...


செய்தியா.. சேவையா

குப்பையா.. கும்பிடுவதா

சீர்தூக்கி பாராது

பணமில்லாது..

பிச்சையெடுக்காது

எம்மொழியும் சம்மதமென...


முப்பால் சுவையால்

முப் பாலினமும்

ஒன்றுகூடி.. படிக்க 

வேற்றுமை யில்லா

ஒருமைப்பாடு பழக...


உப்பு சப்பில்லாத

கதையா.. கவிதையா

இலக்கணப் பிழையா

இங்ஙனம் காணாது..

தினம் தினம் தவறாது.. 

குனிய வைத்து

குட்டிக் கரணமின்றி

ஏங்க வைத்து..

சிரிக்க வைத்து

சிந்திக்க வைத்து...


உலகமே இருண்டாலும்

நீயின்றி.. இவ்வுயிர் 

வாழாதென போதையேற்றி

மயங்க வைத்து

உறவுகளை தள்ளி

உடலையொட்டி உரசும்

அலைபேசி அங்கமே..

கடலளவு பூமியை

கடுகாய் சுருக்கும் 

கையளவு உலகமே

அதில் என்றும் மின்னும்

வாட்சப்குரூப் தங்கமே...

உனக்கு கோடி வந்தனம்...


வழக்கம் போலவே

குறைவின்றி  வளரும்

உன்சேவை ஒன்றே

பிறக்கும் இப்புத்தாண்டிலும்

வாழ்க பல்லாண்டு..


இந்த மனித இனம்வாழ

ஐம்பூதங்கள் போதுமென

நினைத்த இறைவன்கூட

ஆறாவதாய் உனை

படைத்தவனை

பிரமிப்பாக பார்க்கிறான்..

கூட்டமில்லா கோயிலுக்குள்

தனியாகும் நிலைதானோ..!

வாட் டு டூ..  வாட் நெக்ஸ்ட்டென

முப்பெரும் தேவர்கள்

வாட்சப்கால் பேசுகின்றனர்...😁

* * *

Thursday, 21 December 2023

*தத்தை மொழியால்.. வித்தை செய்தவள்..*

🪷🌹🎂முழுமதி.. முகமால்

மீன் விழியால்

தத்தை மொழியால்

வித்தை செய்தவளே...


நித்தம்.. நித்தம் 

என்சித்தம் சிதற

சிரம் தாழ்ந்து

கரம் கோர்த்தவளே..

வாழ்வெனும் வசந்தத்தில்  

ஓர்தவப் புதல்வனை 

பரிசாய் தந்தவளே...


உள்ளம் உவந்து

விருந்தோம்பல் புரிவதே

கடமை யெனும்

பெற்றவரை பெற்றவளே..

அன்பு.. அழகு 

ஆளுமை.. கருணை

பொருள் பொதிந்த

*அனிதா*எனும் பெயர் கொண்டவளே..


உன்சொல்லால் செயலால்

உனைநாடும் மனிதர்

துடுப்புகண்ட ஓடம்போல்

ஒடிந்த மனமாறி 

துடிந்த நிலையேறி

நலமாகி.. வளம்காண

வாழ்த்துகிறேன்..

22-12-2023.. இன்று

பிறந்தநாள் காணும்நீ

ஆண்டவன் அருளால்

நீடூழிவாழ வாழ்த்துகிறேன்...💐

*** *** ***

*வீ. சீனிவாசன்*

(உன்இணை சேர்ந்து வாகை சூடும் கணவன் )