Sunday, 22 December 2024

நறுமுகையே.. நம்பிக்கையே


💐கண் சுத்தும்
தெய்வமாய்
நீ நினைத்தாய்
கண் கொத்தும்
சர்ப்பமாய்
நான் சீறினேன்...

உடல் கூனி
உள்ளம் கலங்கி
காலம் கழிவதற்குள்
நாலுபேர் நகைப்பதற்குள்
நல்வழி காட்டிய நறுமுகையே
நம்பிக்கையே...

அன்று.. என்மகனை ஈன்றதால்
மறுஜென்மம் அடைந்தாய்
அவன் தாயாய்..

இன்று.. அபாயம் அறுத்த
அவதார காளியாய்
மறுஜென்மம் தந்தாய்
என் தாயாய்...

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரமெனில்..
நீயோ இறைவனாகவே
மாறி வந்தாய்...

உன் பிறப்பால்
பெற்றோர் அடைந்தது
பாக்கியமெனில்
உன் வரவால்
நான் அடைந்ததும்
பெரும்பாக்கியமே..

இன்னாருக்கு
இன்னார் என்று
இந் நாளில் (22 டிசம்பர்)
உனை படைத்தான்
எனக்காக
தேவன் அன்று...

நன்றியுடன் கையெடுத்து
நான் தொழுவேன்
உன்பெற்றவர்
பாதம் இன்று...
வாயார வாழ்த்துகிறேன்
நீ.. நீடூழி வாழ்கவென்று..💐💐
*வீ. சீனிவாசன்*
*கணவன்*

Thursday, 18 April 2024

*ஆள்காட்டி விரல் அடையட்டும் பெருமை..*

 


மீனைக் கவ்வும்
கொக்கு போல் 
காத்து கிடக்குது 
ஓர் கூட்டம்..

ஆழ யோசித்து
ஆழக் குழியில் தள்ள
காத்து கிடக்குது
ஓர் ஆணவக் கூட்டம்..

தந்திரங்களில்
வஞ்சனை செய்ய
காத்து கிடக்குது
நரிகள் கூட்டம்..

உழைக்கும் வர்க்கமே...
ஓடாய் தேய்ந்தது போதும்
புதுமை படைக்கும்
இளைய சமூகமே
நாகரிக மோகத்தில்
குனிந்து கிடந்தது போதும் ..

பலியாடுகளாய் 
முந்தைய ஆட்களின்
மந்தை ஆடுகளாய் 
இதுவரை
இருந்தது போதும்..

மான மில்லாமல் 
மாற்ற மில்லாமல்
நாற்றம் வீசிய
ஆண்டாண்டாய்
மண்டியிட்டட
மாண்புமிகு மந்திரிகளை
தூக்கியெறியும்
மகத்தான எந்திரமே
உன் கைவிரல்....

இன்றாவது
உனக்குள் இருக்கும் 
நெற்றிக்கண் திறக்கட்டும்
அருகதையுள்ள
அரசியல் பண்பாளனை
தேர்ந்தெடுக்கட்டும்
உரிமைக்குரல் ஓங்க
நிலம் செழிக்க
உன் ஆள்காட்டி விரல்
அடையட்டும்
வாக்களித்த பெருமிதம் ...
*** ***

ஆண்டவனாய் மாறிடு.. இன்றொரு நாள்



👆வாய்ப்பளித்து வாழ்வளிக்கும்

ஆண்டவனாய் ஆணையிடட்டும் 

நீ செலுத்தும் வாக்கு..


👆கையேட்டில் எழுதாதவன்

கைநாட்டால் அள்ளி

அடகு வைத்தவனுக்கு ஆப்பு

நீ செலுத்தும் வாக்கு..


👆தலைமை சரியில்லா

தலைவனையும்

தவிடு திண்ண வைக்கும்

நீ செலுத்தும் வாக்கு..


👆உச்சி முதல் கால்வரை

புரையோடிய ஊழல்புற்றை

தாங்கும் ஊழல்வாதியை

ஓர்விரலால் ஒழிக்கும்

நீ செலுத்தும் வாக்கு..


👆மாற்றம் வேண்டுமென

மன்றாடும் மனிதா

உன்னிலிருந்து தொடங்க 

இன்றோர் வாய்ப்பு 

ஓட்டெனும் சவுக்கடியால்

பாடம்புகட்டு...👍👆

(வரிசையில் நேரம் வீணாக்காமல் படித்துவிடு.. சரியென நினைத்தால். . பகிர்ந்திடு.. ஆனால் வாக்களிக்கும்போது மறவாதே😃)

Sunday, 14 April 2024

*சித்திரைப் பெண்ணே முத்திரை..*


நித்திரையில் இருந்து

சித்திரையில் எழுந்து 

சிரிக்கும் புன்னகையே 

உன் முத்திரை...


பத்தரைமாத்து தங்கங்களே

தமிழின சிங்கங்களே

வாழ்த்துமழை கூறி

அன்பால் இணை..

மனதிலகற்று வினை

சிறக்கட்டும் மனை

விழியாகட்டும்

மொழியின் துணை

அதுவே நிறுத்தும்

புகழ்ஏணியில் உனை...

*** *** ***

மணபானை நீர்

பனைநுங்கு பதநீர்

பழையகஞ்சி நீர்

இளநீர்.. மோர்..

பொங்கவெச்ச சோறு... 

தலைவாழை விருந்து..


சோளக்கம்பு கூழ்

ராகிக் களி..

கருப்பட்டி வெல்லம்

எள்ளுமிட்டாய்.. 

கல்ல(கடலை)மிட்டாய்

பருப்புவடை, மாவிளக்கு.. 

அரிசிமுறுக்கு.. அதிரசம்

கொள்ளு/ வேப்பம்பூ ரசம் 

சிறுதானிய திண்பண்டங்கள்.. 


பல்லாங்குழி, சடுகுடு

கில்லி, கண்ணாமூச்சி,

சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,

கரகாட்டம், பறையாட்டம்..

இவையெல்லாம்

ஞாபகம் வந்தால்

மீண்டும்..

திண்ணுப் பார்..

விளையாடிப் பார்..

மனமெனும் 

தமிழ்வேர்களுக்கு

பாய்ந்த நீராய்

இன்பம் பொங்கும் ஊற்றாய்...

*** ***

(படிக்கும்போதே.. உங்கள் கண்கள் விரியும் குதூகலமாய் இல்லையா... முக்கியமாக அப்பன் முருகனை கும்பிட மறவாதே. 

தை / சித்திரை மாதம் இரண்டு முறை புதுவருடம் கொண்டாடும் தமிழினம்னு கூட சொல்லாம்)
 

Sunday, 31 March 2024

மை விரலால் மாயம் செய்வாயா மனிதா..?*

 

*மை விரலால் மாயம் செய்வாயா மனிதா..?*

மூளைச் சலவை செய்ய

மூலையில் முடக்க

நாளெல்லாம் கால்கடுக்க 

கூட்டம் ஒன்று தேடுது

ஊர் கூட்டி கூவுது

பல்லைக் காட்டி இளிக்குது...


நேற்றுவரை

யாரடா..எவனடா..நீ

எந்த இனமடா.. நீ

பிச்சைகார கூட்டத்த

தொறத்துடா..

வெறுப்பை உமிழ்த்து

ஓடஓட ..விரட்டி

நாடகமாடிய

நயவஞ்சக நரிகள்

அரசியல்(வாதி)பாவிகளின்

கூட்டம் ஒன்று தேடுது

ஊர் கூட்டி கூவுது

பல்லைக் காட்டி இளிக்குது...


மாயத் தோற்றத்தால்

மயங்கி மண்டியிடாதே

வழுக்கி வீழாதே

வெள்ளை மனமுள்ள

ஏழையெளிய மனிதா..


நாயாக உழைத்தாலும்

பேயாக அலைந்தாலும் 

நாதியற்றவனென

முதுகில் முத்திரை குத்தி

என்றுமுனை ஏணிப் படியேறாது

ஏழ்மைக்குழியில் மூடவே

கைகள் வணங்குகிறது...


கொள்கைக் கொலைசெய்து

கொள்ளை யடிக்கவே

கட்சிமாறல் கூட்டணித்தாவல்

நாடகம் அரங்கேறுகிறது...


நேர்மைத் தோள்களால்

நாளும் நேர்கொள்ளும் 

உழைக்கும் இனமே

ஊளையிடும் ஓநாய்களின்

இனம் கண்டுவிடு...


நட்புறவாகி இணையும்

பண்டிகை அல்ல

உரிமையால் உன்கையால் 

பாடம்புகட்டும் தேர்தல்விழா

மறந்து விடாதே 

மானமுள்ள மனிதா...


உன் கைவிரலால்

உயிர்ப்பிச்சை போடாதே

உண்மை பேசும் 

நாக்குள்ளவனுக்கு

உன் வாக்கையிடு..

உலகம் நடுங்கும்

உன் மைவிரலால்

மாயம் செய்துவிடு...

*** *** ***

Monday, 25 March 2024

இனிய சிட்டுக்குருவி இனமே...*


 *இனிய சிட்டுக்குருவி இனமே...*

எங்கே.. சென்றாயோ

ஏங்கிய உள்ளத்தில்

இன்பத் தேன்சிட்டின்

சிணுங்கல் சீண்டியதால்

துள்ளி எழுந்தேன் 

கைகள் துளாவி

தேடிய கண்களுக்கு

பட்டதோ கும்மிருட்டு...

கனவில் கண்டேனோ..!


இலவம் பஞ்சாய்

தழுவிய பிஞ்சு

சிட்டுக் குருவியே

நலமாய் இருக்கிறாயா...


உன்பட்டு இறகைத்

தொட்டுவிட ஆசை...

காதலாய் உன்இணை

முத்தமிடும் ஓசை

கேட்க ஆசை...


முற்றத்து கூட்டில் 

லூட்டி அடிக்கும் 

உன் *கீச்கீச்* ஜதிக்கு

ஏங்குகிறது மனம்தாளமிட..


பாசமாய் பாடித்திரிந்து

பசும் வயலுக்குள் சுற்றி 

பானைக்குள் தாகம்

தீர்க்கும் எம்மினத்தை

பாந்தமாய் ரசித்தவன்..


இன்று.. பாழடித்து

மொட்டையடித்து

மாடிமேல் மாடிகட்டி 

வாழ்வாங்கு வாழும் 

மானிடனாய்.. மனம்மாறி 

ஓர்நொடியில் பொசுக்கும்

 நிலையாகிவிட்டானென

ஓடிவிட்டாயோ...

மீண்டும் வரும்வழி

மறந்துவிட்டாயோ...


அரசன் அன்று கொல்வான

தெய்வம் நின்று கொல்வான்

என்பது அக்காலம்..

ஒன்றுமறியா உன்

சிற்றினம் அழித்த பாவம்தானோ..

அடித்துக் கொள்கிறோம்

கடித்து கொள்கிறோமோ

இக்காலம்...


என் இனிய

சிட்டுக்குருவி இனமே

எமக்குள் அன்பெனும்

ஊற்று பெருக..

உன் அடிநாதக் குரலோடு

திரும்புவாயா...

***. *** ***

என் வாழ்க்கையென எழுந்து நில்...

 *என்னோட வாழ்க்கையென எழுந்து நில்..*


உள்மனம் ஆறாத

சொல்லால் சுடாதே,.

உன்மனம் மாறாத

செயலால் சுருங்காதே...


கால் கடுக்க

கடன் கேட்காதே...

காலம் கடந்து

கடமை செய்யாதே..


நற்செயல் நன்றியை

அன்றே கூறு...

தீயவை காண்கையில்

தீயாய் பொசுக்கு...


நமக்கான நாள்வரை

நாளை தள்ளாதே...

பிறக்கட்டும் 

புதிய நாளோடு

புது மனமும்...


நான்கு திக்கும் 

நன்கு கவனி

உனக்காக காத்திருக்கும்

ஏதோ ஓருயிர்...


குடும்பம் எனும் கூட்டை உடைக்காதே..

கட்டுவதும் ஒட்டுவதும் 

கடினம்...


என்னடா வாழ்க்கையென

சளிக்காதே

என்னோட வாழ்க்கையென

எழுந்து நில்...


படித்தவன் கைவிட்டால்

படைத்தவன் காப்பான்...


வியர்வைத் துளிகளால்

உன்மணம் கலக்கட்டும்

வீசும் காற்றில்...

தலை நிமிரும் ஓர்நாள்

வெற்றிக் களிப்பில்..

*** *** ***

நானறிந்த கவிதை...

 


உமிழ்நீர்.. உயிர்நீர்

 


நீராதார நிலத்தில் நிற்போமா.. நிலையாய்*


 அகழ்வாராய்வில்

ஆழ்துளை பூமியில்

கண்டெடுத்த ஆழுக்கேறிய 

நாட்குறிப்பு புதையலில்

மூதோர் கிறுக்கல்கள்..


கதிரவன் சுடுமுன்

துள்ளலாய் எழுந்தோம், தொழுதோம்..தவழ்நதோம்..

ஆற்றுநீரை 

அள்ளிப் பருகினோம்

அருவியை 

கருவாய் நினைத்தோம்

குருவிகளும் குளித்தது

கூடுகளில் குதூகலித்தது...


நீரால் இணைந்தோம்

நீரை பகிர்ந்தோம்

சேர்ந்தே..சேமித்தோம்

வந்தாரை வணங்கினோம்..

எம்காலம் மும்மாரி 

பொழிந்த பொற்காலம்...

அடுத்த தலைமுறையே

அடித்துக் கொள்ளாதே

ஆழ்கிணற்று நீரே..

உனையாளும் ஆண்டவன்

அதை நாளும் தொழுதிடு...


நாகரிகத்தில் நனைந்த

கோமாளிகள் நாம்

நீரால்.. பிரிந்து

நீரால்.. எரிந்து

நீரால்.. அடித்து

நா.. வறண்டு கெஞ்ச

துளிநீரை..தெளித்து

கண்ணீர் வடித்தே 

வாழ்கிறோம்...


வண்ணக் கலவை

அடைத்த குப்பிகளுள்

வாழ்வை அடகுவைக்க

நீராதாரம் தொலைக்கிறோம்...

 

ஆற்றுப் பெண்ணின்

மணல் கற்பப் பையகற்றி

மலடாக்குபவர்முன் மானமின்றி

மண்டியிடுகிறோம்


உயிரினம் மீள

நலமாய் வாழ

நீர் - திரவம் தேடி..

நிலாவுக்கு சென்று

நிலத்துக்குள் நுழைந்து..

ஓர்துளி கண்டவரே

மனித தெய்வமனெ

ஆரத் தழுவுவதற்குள்

விழித்திடு.. சமூகமே...


அறிவோடு அறிந்திடு

நீராதார சேமிப்பு

அருமை தெரியா

வீணர்களை வீழ்த்திடு

கண்ணீர் வற்றுமுன்

தண்ணீர் காத்திடு...


அன்று..

ஆண்டதும் மாண்டதும்

மண்ணால் பெண்ணால்

பொன்னால்...


இன்று..

வாழ்வதும் வீழ்வதும்

நீரால்... தண்ணீரால்


இனியும் நிலையாய் நிற்போமா

நீராதார நிலத்தில்..?

மறந்தே.. மனம் மரத்தே.. 

மடிவோமா நிலத்தடியில்..?

கேள்விக்கு தேடும் பதிலாய்

இதயம் துடிக்கட்டும்..

*** *** ***

புதுதில்லி

உண்பதற்கும் முன் சிந்திப்போம்

 *எதை உண்பதற்கும் முன் கவனமாக இருங்கள்...*

முரண்பாடுள்ள மனிதர்கள், செயல்கள்  கேள்விபட்டிருக்கிறோம்... ஆனால் முரண்பாடுள்ள உணவும் அதன் உடனடி விளைவும் பார்த்திருக்கிறீர்களா.

"நீண்ட நாட்களுக்கு பிறகு என் பையன் மனைவி விரும்பி சொன்னதற்காக நேற்று மதியம் தில்லி கன்னாட் பிளேசில் உள்ள சரவணபவனுக்கு மதிய உணவு உண்ண சென்றோம்.. வழக்கம்போலவே கூட்டம் அதிகம்... டோக்கன கொடுத்து அழைப்பார்கள்..

இடம் கிடைத்து உட்கார்ந்ததும் ஆர்டர் எடுக்க பேரர் கேட்கும்பொழுது..  மாற்றத்திற்காக நமது வீட்டில் அடிக்கடி செய்யாததை முயற்சி செய்வோமென சப்பாத்தி, ஆப்பம் எனக்கும், மனைவி மகன் இரண்டு ஃபுல் மீல்ஸ் அதாவது அனைத்து காய்கறி கூட்டு பொறியலுடன் சோறு குழம்பு ரசம் தயிரென இருக்கும் இரண்டு பிளேட் செய்தோம்... 

நன்றாக இருந்தது என்று சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தோம்.. 

வரும் வழியில் அரைமணி நேரம் ஆகவில்லை.. மனைவி சொன்னாள் வயிறு லேசாக வலிக்கிறதென்று... நான் சொன்னேன் நம் வீட்டில் செய்யும் உணவு வகைதானே ரெஸ்டாரன்ட் லும் சாப்பிட்டோம்.. ஏன் வலிக்குதுன்னு...

அதற்கு "எனக்கும் அதுதான் புரியலைங்க"ன்னாள் .. 

சரியாப் போயிடும் னு சொல்லி இருந்துவிட்டோம்... ஆனால் இரவு உணவை வீட்டில் உண்ண பசியெடுக்க வில்லை.. மதிய உணவின் கனம்தானென வேண்டாமென உறங்கிவிட்டோம்...

அடுத்த நாள்.. என்றும் காலைக்கடன் பிரச்சினை இல்லாத எனக்கு

 Gut health கெட்டதால் காலைக்கடன் முடிக்க சிரமமாக இருந்தது..(மலம் வரவேயில்லை) 

என்ன.. வீட்டிலும் ரெஸ்டாரன்ட்டிலும் ஒரே மாதிரியான உணவுதானே.. கொஞ்சம் வேணா மசாலா தூக்கலாக இருக்கலாம் என்றுதான் நமக்கு நினைக்கத் தோணும்.. ஆனாலும் வயதின் காரணமாக உடல்நலம் உடனே கெடத் தொடங்குகிறது.. மனைவியும் சொன்னாள் வயிறு கடித்து கடித்து தான் காலைக்கடன் முடித்தேன். பையன் 15 வயதென்பதால் பிரச்சினை ஒண்ணுமில்லை...

நான் நினைத்தேன... நம் பணத்தை செலவுசெய்து நாமே வினை வாங்கிவிட்டோம் என்று..

எல்லோருக்கும் தெரியும் காலைக்கடன் சரிவர வராமல் நீண்ட நேரம் முக்குபவர்களுக்கு தான் பைல்ஸ் பிராப்ளம் அதிகம் வருகிறது...

ஒரே வகையான உணவுதான் ஆனால் செய்யும் முறை அதை பதப்படுத்தப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட செயற்கை மசாலா கலப்பதால் (கண்டிப்பாக கலப்பதுதான் ஓட்டல் வியாபாரத்தின் எழுதப்படாத சட்டம்) எவ்வளவு விளைவுகள் ஆரோக்கியம் கெடுகிறதென புரிந்துகொள்ளவும்..


ஆகவே.. எனக்கும் புரிந்தது, ஆனால் gut health எப்படி சரியாக்குவது என்று...  எனக்கு தெரியுமென்பதால் கவலைப்படவில்லை..


நம் தமிழ்ச் சமூக சித்தர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பர்ய சொத்து..

*யோகாசனம்* தான் அதற்கு சிறந்த மருந்து ..


அரைமணி நேரம்.. யோகா தான் செய்தேன் .

அதாவது

பிராணயாமம்  முடிந்து மற்ற 10 யோகா 10நிமிடம், அடுத்ததாக முக்கியமான *தனுராசனம்*, *ஹலாசனம்* இரண்டும் 15நிமிடம்  செய்து முடித்தேன்.. 

வயிறு இளகியாதாக உணர்ந்தேன்..


ஓய்வேடுத்த 15 நிமிடங்களில்  காலைக்கடன் எந்த வலியும் பிரச்சினையின்றி முடிந்தது... 😃


So... we must understand the magic of Yoga.


மனதும் உடலும் இரண்டும் நன்றானதும்... சிரித்துக் கொண்டே 

சொல்லிக்கொண்டேன்.. *What a Great ancient Doctors our Tamil Sidhars were*

எதை உண்பதற்கும் முன் கவனமாக இருங்கள்..

*விரும்பும் உணவே..*

*வியாதிக்கு விருந்து வைக்கிறது*

*அதை சரிசெய்ய*

*உடலே மருந்துமாகிறது...*

*உடலை நேசிப்பவன்*

*தினம் யோகாவை யாசிப்பான்..*

***


(I know the whole matter can be narrated in little more simple.. ஆனால் என் தாய்மொழியில் மட்டுமே விளக்கமாக சொல்லமுடியும...



Sunday, 18 February 2024

நீதிபதி... இல்லை ஸ்ரீபதி என்னும் நான்..*

பல்லுயிர் கலந்த

மனித இனமே..

என் இனம் ஏன் 

இவ்வண்ணமென

எண்ணும் மனமில்லாத

பெண்ணினம் நான்

தூங்கிய நொடிகளில்

ஏங்கிய நொடிகளே அதிகம்..


செல்லுமிடம் தூரம்தான்

சென்றுவிட்டேன் 

போகும் இடமும்

இனி தூரம்தான்

போராடும் மனம்

சளைக்கவில்லை...


மடை திறந்ததும் 

நடையை அடைக்கும் 

தடைக் கற்களை

உடைத்துச் செல்லும்

காட்டாற்று வெள்ளம்..


ஒடுக்கப்பட்டது

தடுக்கப்பட்டதென

ஒதுக்கபட்ட எம்மை

அவனால் படைக்கப்பட்டதென

அணைத்த அன்பிதயங்களே

கோடி வணக்கங்கள்.. 

நல்லதோர் வீணையாய்

இன்னலை துடைத்த

இன்னிசையாகும்

உறுதியுடனே.‌.

நாற்கால் இருக்கையில் 

நானிருப்பேன்...


நளினம் கற்ற பெண்இனமே

நீ நதிபோல ஓடிக்கொண்டிரு

நாளைய வரலாறு

நம் பெயரும் சொல்லுமென 

நம்பிக்கையோடு...🙏

*** ***

(ஜவ்வாது மலையில்.. அரிய ஜவ்வாது மணமாய் வீசும் 23வயது பெண் நீதிபதிக்கு சமர்ப்பணம் இக்கவிதை..🙏)

Sunday, 4 February 2024

கேன்சர் எனும் கேங்ஸ்டர்..

 


புற்றீசலாய் வளருமோ

புயலாய் பரவுமோ

புற்றுநோயெ ன தவிக்கும் 

மனம் வேண்டாமே

மனித இனமே...


புகைப்பதும்

மதுவை சுவைப்பதும் 

அன்றோர்நாள் ஆனந்தமே...

அதனால் வருவதும்

ஆட்கொள்வதும்

ஆயுளுள்ளவரை 

அலைக்கழித்து..

உலைவைத்து

அடங்க வைக்குமே...


கற்கத் துடித்த

கவ்விப் பிடித்த

கேடுகள் யாவும்

நொடியில் நடக்கும் 

மனச் சிதறலே..


விருட்சமாகி வளர்ந்தால்

விடாது துரத்தும்

நாடிகள் நொடியும்வரை...

பிடிகள் இறுகுவதற்குள்

விழித்துக்கொள்

தூய வாழ்விழந்து 

மாய வலைக்குள்

மறைந்து விடாதே...


கேன்சர் எனும்

கேங்ஸ்டர்கள் 

சூழ்வதற்குள்

மான்ஸ்டர்களாக

மாறிவிடு மானிடா...

***** ** *****

Saturday, 27 January 2024

விதையே.. நீ உறங்குகிறாயா..?


நெல் விதையே.. 

நீ உறங்குகிறாயா..? 

முடியவில்லை

விதைத்தவன் என்னால்...


நன்றாக வளர்ப்பேனா...

செழித்து சிரிக்கும்

உன் முகத்தை பார்ப்பேனா...


பல உயிர்களின்

வயிற்றை வாடாது

காக்கத் துடிக்கும் உன்னை

வாடாமல் காப்பேனா..


வேதியியல் கழிவுகளகற்றி 

இயற்கை காற்றை

சுவாசிக்க விடுவேனா..


மனிதக் கேடுகள்

ஏற்றும் நோயண்டாது 

உனை அணைப்பேனா..


குடைந்த கேள்விகள்

நிறைந்த மனதால்

உறங்க முடியவில்லை..


கண்ணீர்த் துளிகளால்

நனைக்க மாட்டேன் 

கவலையின்றி எழுந்து வா..

நடுங்கும் உனக்கு

ஊட்டச் சத்தாயிருப்பேன்

பூமிப்பந்தின் பசுமைக்கு

உயிர் கொடுக்கும்

உன் குடுமபத்தை

கட்டிக் காக்கும்

போராளி ஆவேன்.. 


என்னுயிர் போனாலும் 

உன்னுயிரை

வளர்த்தெடுப்பேன்

இறுதிமூச்சு விடும்வரை...

*** ***

(ஓடாய் தேயும் உழவனுக்கு சமர்ப்பணம் )

Monday, 22 January 2024

ராம்.. நாமம் சொல்லும் தமிழ ராம்..(22-01-24)


 காக்கும் ஆண்டவராம்

விஷ்ணுவின் மறு

பிறவியானவராம்

தசரதன் பெற்றவராம்

அயோத்தியில்

பிறந்தவராம்...


ஓர்சொல்.. ஓர்வில் 

ஓர்இல் கொண்டவராம்

தெய்வ பிராட்டி

சீதையை மணந்தவராம்...


அதிபலசாலி அனுமன் 

அவர் பக்தராம்

ஜெய் ஸ்ரீராமென

நெஞ்சை பிளந்தவராம்

இலங்கையை எரித்தவராம்..


அநீதியை

அழித்தவராம்

நீதியை நாட்டியவராம்..


தேசத் தந்தை 

வணங்கியவராம்

உயிர் பிரியுமுன்

ஹேராமென 

துடித்தவராம்...


ராம்.. ராமென வணங்கும்

உயிர்கள் துன்பமகல

அருள்புரிந்தவராம்

அகிலத்தை காத்தவராம்...


அல்ல 108முறை

வாழும் வரை

தனை மறந்தே

ராம்.. ஜெயம்

தாய் மொழியில்

சொல்பவராம்

ஆத்திகன்..நாத்திகன்

கலந்த தமிழராம்

நாம் எல்லாம் 

கம்ப ராமாயணம்

படித்தவராம்...

தமிழ் கடவுள்(முருகன்)

தாய்மாமன் முறையாம் 

திருமாலின் அவதாரம்

ஜெய்.. ஸ்ரீ..ரா..ம்🙏

Tuesday, 16 January 2024

தை..தை..யென* *தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*

 💐 *தை..தை..யென*

*தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*


*தை* மகள்

தமிழச்சிகளின்

ஒய்யாரமாய் ஒதுங்கிய

ஓரக்கண்கள்

கனலாய்.. காதலாய்

ஒளிவீசி உசுப்பிட.


திரண்ட தோளோடு

துடிக்கும் விடலைகள் 

துள்ளி விளையாட..


கொழுத்த பிடறியாய்

திமிரும் எருதுகள் 

எள்ளி நகையாட..


ஆடுகளத்தில் அதிரடியாய்

அதகளம் செய்யும் 

ஜல்லிக்கட்டு..

அழியாத சுவடாய்

வீரச் சின்னமாய் 

ஆழமாய் பதிந்த

விழுப்புண் தழும்புடன்

வீரத்தமிழன் செய்த

போர் விளையாட்டின்

நுழைவுச் சீட்டு...


கறுப்புக் கரும்பு

மஞ்சள்.. கிழங்கு

அனைத்த

மண்பானை வயிற்றில்

வெள்ளை பச்சரிசி

பாசிப் பருப்புடன்

வெல்லம் அணைக்க

பாலிட்டு.. கொஞ்சி

கொதிக்க விட்டு 

*பொங்கலோ.. பொங்கலென*

குடும்பமாய்.. கூட்டமாய் 

குதூகல கூச்சலிட்டு

சூரியனை வணங்கி

மாட்டன்னையின் 

நெற்றியில்

சிவப்புத் திலகமிட்டு

வாழவைத்த

பூமியை முத்தமிட்டு

வாழ்வளிக்கும்

உழவனை உயர்வாக்கி..  

உலகெங்கும் 

உரக்கச் சொல்லும் ஓர்விழா.. 

*பொங்கல்..* எனும் 

தமிழர் திருவிழா

தைத் திருநாள்...


*தை..தை..யென*

*ஜதிகள் அதிரிட*

கொண்டாடு தமிழா..

உனதருமை பெருமை

அண்ணாந்து பார்க்கும் 

உலகம் என்றும் 

உன்னோடு.. தமிழா...🙏

***