Friday, 15 September 2023

அண்ணா வைப்போல் ஆகுமா உன்நா


பேச்சும் மூச்சும்

மனிதனின் பிரதானம்

அண்ணாவின் இவை

அனைத்தும்

தமிழனுக்கே தானம்.


பேச்சும் மூச்சும் கீதம்

அண்ணாவின் இந்நாதம்

ஆர்ப்பரித்த நம்

இனமடக்கிய தாகம்..


சிலநேரப் பேச்சுக்களே

பலநேர வரலாற்றுக்கள்

பேச்சுக்கலை- அது

பறிக்ணும் களை

வளர்க்கணும்

பலர் மூச்சுகளை...


கடமை கண்ணியம்

கட்டுப்பாடு மூன்றும்

மூன்றெழுத்து முத்தாய் 

தமிழின வித்தாய்

*அண்ணா* உதித்த

மனிதன் சொத்தாய்

காதுகளில் ஒலித்துக்

கொண்டிருக்கிறதென

மறவோம் இன்று...


ஆகச் சிறந்த

பேச்சாளர் அண்ணா -அவரால்

எவரும் பெற்றிலர் இன்னா

முயன்றால் அவன் போலாகும் 

எந்நாளும் உன் நா..💐💐

*** *** **

Sunday, 10 September 2023

போர்த் தொழில் தேவையா..மானிடா

 


எதிர்பாராமல்

எதிர்வினையால்

எதிர்கொள்ளும்

ஏச்சுக்கள் பேச்சுக்கள்

ஏராளம் இவ்வுலகில்...


ஆரவாரமில்லா

அதிசயங்கள் 

ஆச்சர்யங்கள்

அதிர்ச்சிகள் நிகழ்வுகள்

குழப்புகிறது மனதில்..


ஆடல் பாடல்கள்

கேளிக்கைகள்

ஆட்கொள்வதும்

கலவரங்களால்

ஒடுங்குவதும்

ஒடுக்குவதும்

வாடிக்கை இங்கே..


நிமிடங்கள் யாவும்

நிரந்திரமின்றி ஓடுகிறது

முதுமை இளமையை முந்துகிறது

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மணப்பதால்

பலியாடுகள் விழுந்த

பேராசைகுளம் நிரம்புகிறது..


நீ.. நானென ஒதுங்காமல்

நாமென இணைந்து

தோற்பதும் ஜெயிப்பதுமே

போராட்டம்

நன்மை நூறாயினும்

ஓர்தீமையால் ஒதுக்கிவிடும்

இம்மனித இனம்...


காய் நகர்த்தாமல்

காயப் படுத்தாமல்

கவசம் இடாமல்

நேர்கொண்ட பார்வையால்

கலங்காதுநில் மானிடா...


எது தேவையோ

அதுவே தர்மமாயின்

செய் தொழிலோடு 

போர்த் தொழிலும்

பழகுவாய் மானிடா...

*. * *

கள்ளம் கபடமில்லா கதைகளால் வாழைப்பழத்தில் நுழைத்த ஊசிபோல் நம்மை நெறிபடுத்தி வளர்த்த தாத்தா பாட்டியின் ஆசீர்வாதம் பெற்று அவரை வணங்குவோம் இன்று...

* * *

Tuesday, 5 September 2023

இருளைப் போக்கும் அருளாளர்களை வணங்குவோம்

                                           


 மூச்சை வளர்த்தது கருவறை

பேச்சை வளர்த்தது வகுப்பறை..

நேயம் வளர்த்தது திருமுறை

நற்பண்பை வளர்த்தது படிப்பறை,.

உயிர்காப்பவன் ஈசன்

உயர்வாக்குபவன் ஆசான்...


ஊதாரி உள்ளமும்

மதியா திமிரும்

உள்ளேன் ஐயா..யென

மண்டியிட்ட ஆடாகும்

ஆசானைக் கண்டால்..

நீரின்றி அமையாது

உலகெனின்

நீயின்றியும் அமையாது நல்வுலகு... 


கருவறை கடவுளை வணங்கினால்

மனம் பண்படும்

வகுப்பறை ஆசிரியரை வணங்கினால்

வாழ்வு வளம்பெரும்


கற்காலமோ

கணிணி காலமோ

எக்காலமும்

இருளைப் போக்கும்

அருளாளர் ஆசிரியர்கள்..


மாணவர்களே..

உறங்கும் உன்மதியை 

உணர்வால் மிதித்து

செயலால் செதுக்கி

மானமுள்ள மனிதனாய்

மாண்புமிகு தலைவராய்

முகவரி கொடுப்பவர்

ஆசிரிய ரெனும்

மாணிக்கங்களே..

அரண்மனை காக்கும்

மதில் போல்

ஆசிரியரைக் காக்கும்

காவலனாவோம்...


ஓர்பிறவி தந்த

பெற்றோரைப்போல்

மறுபிறவி தரும்

ஆசிரியர்களின்

பாதம் பணிய 

மறவோம் என்றும்...

* * *

அனைவருக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.💐

Saturday, 2 September 2023

எதையும் எனதாக்கும் எவனும்

 



வறண்ட தோல்

வாடிய முகம்

ஒட்டிய வயிறு

ஒடிசல் தேகம்

உலர்ந்த வாய்

உடைந்த மனம்

 

மண்ணை தொட்டு

வாழும் உழவன்

நிலையும் இதுவே..


மண்ணில் வீழாது

விண்ணிலேறி

வாகை சூட 

வழியேற்றும் தந்தை

நிலையும் இதுவே..


எல்லாம் பெற்று

எகத்தாளமாய் வாழ்பவனும்

ஏய்த்து வாழ்பவனும்

ஒற்றை நாடியில்

கடைக்கோடி நிற்கும் 

நிலையும் இதுவே..


எதையும் எனதாக்கும் 

எவனும் ஒன்றுமில்லா

நிலையும் இதுவே..


ஆதலால்..

ஆடி அடங்கும்வரை

அடக்கமாய் வாழ்வீர்..

கர்மவினைகளுள் சுழன்று

இன்னுயிர் உழன்று

கரைவதற்குள்

நேசக்கரம் ஊன்றிய

விதைகளாய்

மண்ணிற்குள் உரமாவோம்

நம்பேர் மணம் 

வீசும் மரமாவோம்...

* * *