சண்டை போடாமல்
சிண்டு முடிக்காமல்
துண்டு போட்டு
செந்தமிழ்.. கொடுந்தமிழ்
செல்(Cell)தமிழால்
தொண்டாற்றிய
வாண்டுகளை
நோண்டி நொங்காமல்
தோண்டி துருவாமல்
மண்டை உடையாது
மண்டி யிடாது..
அண்ட வைத்து
அண்டாகுண்டா ஏதுமின்றி
அலைக் களித்து
கண்டு.. கேட்டு களைப்பாக்கி
பண்டிதனாக்கி
அண்ட மடக்கிய பிண்டமாய் ...
நமக்குள் தூங்கிய
நவ ரசங்களை
தட்டி எழுப்பி..
அறு சுவையை
பார்வையால் ஊட்டி..
உலகை மயிலால்
சுற்றிய முருகனாகாது
உள்ளங்கையால் சுற்றி
கணபதியாக்கி
பானைவயிறு வீங்க
எந்நேரம் காதலாய்
பணிவாய்.. பவ்யமாய்..
தலைகவிழச் செய்து...
செய்தியா.. சேவையா
குப்பையா.. கும்பிடுவதா
சீர்தூக்கி பாராது
பணமில்லாது..
பிச்சையெடுக்காது
எம்மொழியும் சம்மதமென...
முப்பால் சுவையால்
முப் பாலினமும்
ஒன்றுகூடி.. படிக்க
வேற்றுமை யில்லா
ஒருமைப்பாடு பழக...
உப்பு சப்பில்லாத
கதையா.. கவிதையா
இலக்கணப் பிழையா
இங்ஙனம் காணாது..
தினம் தினம் தவறாது..
குனிய வைத்து
குட்டிக் கரணமின்றி
ஏங்க வைத்து..
சிரிக்க வைத்து
சிந்திக்க வைத்து...
உலகமே இருண்டாலும்
நீயின்றி.. இவ்வுயிர்
வாழாதென போதையேற்றி
மயங்க வைத்து
உறவுகளை தள்ளி
உடலையொட்டி உரசும்
அலைபேசி அங்கமே..
கடலளவு பூமியை
கடுகாய் சுருக்கும்
கையளவு உலகமே
அதில் என்றும் மின்னும்
வாட்சப்குரூப் தங்கமே...
உனக்கு கோடி வந்தனம்...
வழக்கம் போலவே
குறைவின்றி வளரும்
உன்சேவை ஒன்றே
பிறக்கும் இப்புத்தாண்டிலும்
வாழ்க பல்லாண்டு..
இந்த மனித இனம்வாழ
ஐம்பூதங்கள் போதுமென
நினைத்த இறைவன்கூட
ஆறாவதாய் உனை
படைத்தவனை
பிரமிப்பாக பார்க்கிறான்..
கூட்டமில்லா கோயிலுக்குள்
தனியாகும் நிலைதானோ..!
வாட் டு டூ.. வாட் நெக்ஸ்ட்டென
முப்பெரும் தேவர்கள்
வாட்சப்கால் பேசுகின்றனர்...😁
* * *

No comments:
Post a Comment