*மை விரலால் மாயம் செய்வாயா மனிதா..?*
மூளைச் சலவை செய்ய
மூலையில் முடக்க
நாளெல்லாம் கால்கடுக்க
கூட்டம் ஒன்று தேடுது
ஊர் கூட்டி கூவுது
பல்லைக் காட்டி இளிக்குது...
நேற்றுவரை
யாரடா..எவனடா..நீ
எந்த இனமடா.. நீ
பிச்சைகார கூட்டத்த
தொறத்துடா..
வெறுப்பை உமிழ்த்து
ஓடஓட ..விரட்டி
நாடகமாடிய
நயவஞ்சக நரிகள்
அரசியல்(வாதி)பாவிகளின்
கூட்டம் ஒன்று தேடுது
ஊர் கூட்டி கூவுது
பல்லைக் காட்டி இளிக்குது...
மாயத் தோற்றத்தால்
மயங்கி மண்டியிடாதே
வழுக்கி வீழாதே
வெள்ளை மனமுள்ள
ஏழையெளிய மனிதா..
நாயாக உழைத்தாலும்
பேயாக அலைந்தாலும்
நாதியற்றவனென
முதுகில் முத்திரை குத்தி
என்றுமுனை ஏணிப் படியேறாது
ஏழ்மைக்குழியில் மூடவே
கைகள் வணங்குகிறது...
கொள்கைக் கொலைசெய்து
கொள்ளை யடிக்கவே
கட்சிமாறல் கூட்டணித்தாவல்
நாடகம் அரங்கேறுகிறது...
நேர்மைத் தோள்களால்
நாளும் நேர்கொள்ளும்
உழைக்கும் இனமே
ஊளையிடும் ஓநாய்களின்
இனம் கண்டுவிடு...
நட்புறவாகி இணையும்
பண்டிகை அல்ல
உரிமையால் உன்கையால்
பாடம்புகட்டும் தேர்தல்விழா
மறந்து விடாதே
மானமுள்ள மனிதா...
உன் கைவிரலால்
உயிர்ப்பிச்சை போடாதே
உண்மை பேசும்
நாக்குள்ளவனுக்கு
உன் வாக்கையிடு..
உலகம் நடுங்கும்
உன் மைவிரலால்
மாயம் செய்துவிடு...
*** *** ***

No comments:
Post a Comment